2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின்கீழே ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வழக்கு கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்.
ராமர் ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே நீண்ட காலமாக நிலவி வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த *1949* ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம், மசூதியை மூடி முத்திரையிட்டது.
*1950* ஆம் ஆண்டு பாபர் மசூதியை வழக்கமான வழிபாடுகளுக்காக திறக்க வேண்டும் என ஃபரிசாபாத் நீதிமன்றத்தில், *1950* ஆம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்த்து இதே கோரிக்கையை வலியுறுத்தி பலரும் மனு தாக்கல் செய்தனர்.
பாபர் மசூதி தங்களுக்கு சொந்தமானது என்ற இந்து அமைப்புகளின் வாதத்தை எதிர்த்து, *1961* ஆம் ஆண்டு உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.
பாபர் மசூதியை திறக்கவும், இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்து *1986* ஆம் ஆண்டு ஃபரிசாபாத் மாவட்ட நீதிபதி ஹரி சங்கர் பாண்டே உத்தரவிட்டார். இதே ஆண்டில் பாபர் மசூதி செயல்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது.
*1989* ஆம் ஆண்டு பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. திரிலோக் நாத் பாண்டே என்பவர் தன்னை ராமரின் நெருங்கிய நண்பர் எனக்கூறி வழக்கில் இணைத்து கொண்டார்.
*1992* ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்க லிபரான் ஆணையத்தை *1992* ஆம் ஆண்டு *டிசம்பர்* 12 ஆம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைத்தார்.
*1993* ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சிபிஐ, *பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.*
*1994 ஆம் ஆண்டு அக்டோபர் 24* ஆம் தேதி இஸ்மாயில் ஃபரூக் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதியில் தொழுகை நடத்துவதால் மட்டுமே இஸ்லாம் முழுமை அடைந்துவிடாது என தெரிவித்தது.
*2001* ஆம் ஆண்டு மே மாதம் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி மீதான குற்றப்பிரிவுகளை சிறப்பு நீதிமன்றம் நீக்கியது.
*2003*ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின்கீழே ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை இஸ்லாமிய அமைப்புகள் நிராகரித்தன. *2009* ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்த லிபரான் ஆணையம், 68 பேர் மீது குற்றம்சாட்டியது.
*2010* ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பகுதிகளாக பிரித்து, 2 பகுதிகளை இந்து அமைப்புகளிடமும், ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புகளிடமும் வழங்க உத்தரவிடப்பட்டது.
*2011* - உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்காத வழக்கின் 3 தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு 2011 மே மாதம் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
*2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.*
*2017 மார்ச் 21* ஆம் தேதி - சுப்பிரமணியன்சுவாமியின் மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காண அறிவுறுத்தியது. அவ்வாறு முன்வந்தால் மத்தியஸ்தம் செய்யத் தயார் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
*2019 ஜனவரி 8 ஆம் தேதி* உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தலைமை நீதிபதி நீங்கலாக எஸ்ஏ பாப்டே, என்வி ரமணா, லலித், சந்திரசவுட் ஆகியோர் இடம்பிடித்தனர்.
*2019 ஜனவரி 10* - இதில் நீதிபதி லலித் வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார். ஜனவரி 25 2019 - இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்ஏ பாப்டே, சந்திரசவுட், அசோக் பூஷன், எஸ்ஏ நஷீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது.
*மார்ச் 8, 2019* - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆகஸ்ட் 6, 2019 - கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடைபெற்றது.
*அக்டோபர் 15, 2019* வழக்கு விசாரணையை அக்டோபர் *16ஆம் தேதியுடன் நிறைவு* செய்ய விரும்புவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். அதன்படி, இன்று வழக்கு விசாரணை நிறைவுபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
*நவம்பரில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது.*